இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!
இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன, தனது நற்சான்றிதழ் பத்திரங்களை இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவிடம் முறைப்படி சமர்ப்பித்துள்ளார்.
ஜகார்தாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ‘இஸ்தானா மெர்டேகா’-வில் நேற்று (ஜூன் 8) நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்த நற்சான்றிதழ் சமர்ப்பிப்பு இடம்பெற்றது. நிகழ்வின் போது தூதுவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளை இந்தோனேசிய ஜனாதிபதியிடம் தூதுவர் சஷிகலா பிரேமவர்தன தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையின் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், 2027 ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கை–இந்தோனேசிய தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய விருப்பம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலாக, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மூத்த இராஜதந்திரியான சஷிகலா பிரேமவர்தன, இதற்கு முன் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராகவும், கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
