எல் நினோ காலநிலை தாக்கம் : இலங்கையில் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிக்கும் அபாயம்!
கணிக்கப்பட்ட எல் நினோ (El Niño ) காலநிலை இலங்கையைத் தாக்கினால், குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை விநியோகிப்பது கூட அவசியமாகலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக,
எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக இருக்கக்கூடும். இது நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்கள் வற்றிப்போகும் அபாயங்களை ஏற்படுத்தும்.
நீடித்த வறட்சி ஏற்பட்டால், தற்போதுள்ள அதனை எதிர்கொள்ள தம்மிடம் தற்போதுள்ள வளங்கள் போதுமானதாக இருக்காது.
குறிப்பாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடம் அவசரகால விநியோகத்திற்காகக் குறைந்த எண்ணிக்கையிலான தண்ணீர் பவுசர்களே உள்ளன.
இந்த எல் நினோ நிலை, நீர் ஆதாரங்களை வற்றச் செய்து, தண்ணீர் பெறுவதற்கான வழிகள் எதுவும் இல்லாமல் செய்துவிடும்.
இதனால், குடிநீர் விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் இயல்பை விட அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலையால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வான எல் நினோ, உலகளாவிய வானிலை முறைகளை சீர்குலைத்து, இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில் மழைப்பொழிவைக் குறைத்து, கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
