நாட்டில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு : முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ள சீனா!


இலங்கையில் நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளது.

அத்துடன், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘சினோபெக்’ நிறுவனத்தின் வழமையான வழங்கல்களுக்கு மேலதிகமாக இருக்கும்.

மேலும், எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் அங்கிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி வழங்குமாறு இலங்கை, அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க விசேட தூதுவர் செர்ஜியோ கோர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழங்கிய 30 நாள் சலுகைக்காலம் ஏப்ரல் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனினும், குறைந்தது மூன்று மாத கால அனுமதி கிடைத்தாலே ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தைத் தொடர முடியும் என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.