ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!
ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையானது, அதன் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஈரானால் சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதல் தற்போதுவரை தொடர்ந்து வருவதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்த நிலையில், ஈரானின் 2 மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.
பின்னர் ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில்,”உங்கள் இருப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் பல வாரங்களாக தன்னுடைய நாட்டில் இணையதள சேவையைத் துண்டித்துள்ளதால், இஸ்ரேல் இராணுவத்தின் எச்சரிக்கைகளை ஈரானிய மக்கள் பார்ப்பது கடினமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
