எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பு!


ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles – EV) தேவையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. இதனால் ஆஸ்திரேலியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களை நோக்கி வேகமாக மாறி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் BYD மற்றும் VinFast போன்ற நிறுவனங்களின் மின்சார வாகன விற்பனை கடந்த இரண்டு வாரங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால், மார்ச் மாதத்தில் மட்டும் EV கடன்களுக்கான விண்ணப்பங்கள் 100% அதிகரித்துள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் செலவைக் குறைக்கவும், எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாமானிய மக்கள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் மின்சார வாகனங்களையே முன்னுரிமையாகத் தேர்ந்தெடுக்கின்றன.

இந்த திடீர் மாற்றம், ஆசிய நாடுகளில் பசுமை எரிசக்தி நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.