எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு!


அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், 

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசியலமைப்புச் சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த வழிகாட்டல் ஆலோசனைகள் நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக அரச அலுவலகங்களின் பணியாளர் போக்குவரத்து மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்திற்காக அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருகை தரும் போது தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 

முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், 

களப்பணிகளுக்காக குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைப் பயன்படுத்தும் வகையில் தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் வலுசக்தியை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தவும், 

குளிரூட்டிகளுக்குப் (Air Conditioners) பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தவும் அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் மின்தூக்கி (Lift) பயன்பாட்டைக் குறைத்து படிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், 

உள்ளூராட்சி நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மின்விளக்குகளை தேவையற்ற நேரங்களில் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், 

பகல் நேரங்களில் நிறுவனங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்வதற்கும் அந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்தும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நிறுவனத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் காணப்படுமாயின், 

பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி (Online) ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடமை நேரத்திற்குப் பின்னரும் வார இறுதி நாட்களிலும், அத்தியாவசியத் தேவை தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை மூடி வைப்பதை உறுதி செய்யுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிப்புறத் தாக்கங்களின் போது அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் எனவும், 

தேசிய வலுசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க உறுதி பூண வேண்டும் எனவும் அந்த வழிகாட்டல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.