உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட அறிக்கை!


இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை மறுத்து, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“எச்சரிக்கையாக இருங்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தை கோருகின்றோம்” எனும் தலைப்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது போல் அமைந்துள்ள இந்தச் செய்தி, எந்த வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்துவதாக இருந்தால், அது பொலிஸ் ஊடகப் பிரிவினால் முறையான கடிதத் தலைப்பின் (Letterhead) கீழ் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

பொலிஸாரின் தினசரி செய்திகள் மற்றும் அறிவிப்புகள் அவர்களது அதிகாரப்பூர்வ Facebook பக்கம் மற்றும் YouTube அலைவரிசை ஊடாக உடனுக்குடன் பதிவேற்றப்படும்.

பொலிஸ் இலச்சினை அல்லது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்புவது ஏதேனும் திட்டமிட்ட செயலா என்பது குறித்து கண்டறிய ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற பதிவுகள் குறித்து மிகுந்த அவதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.