பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் 4 நாட்கள் மாத்திரமே இயங்கும்!
எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, பாடசாலைகளின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலை விடுமுறை தினமாகக் கருதப்படும்.
புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடும் வகையில் அவர்களுக்குத் தேவையான ஒப்படைப்புகள் (Assignments), பயிற்சிகள் மற்றும் மீளாய்வு வேலைகளை வழங்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்குரிய காலம் குறைவாக இருப்பதால், பாடசாலை நேரத்தை பாடசாலைகளினாலோ அல்லது வெளி நிறுவனங்களினாலோ ஏற்பாடு செய்யப்படும் ஏனைய நிகழ்ச்சிகள் அல்லது திட்டங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.
அத்தியாவசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அணிவகுப்புகள் (Parades) போன்ற அதிக எரிபொருள் தேவைப்படும் நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்படும் கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திட்டமிடப்பட்ட பயணங்களில் மாணவர்கள் பங்கேற்பது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து அதிபர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தவுடன் பாடசாலைகளின் செயல்பாடுகள் குறித்த மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
