கொழும்பில் காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி!


கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு சாதாரண நாட்களில் சுற்றப்பட்ட சிவப்பு ரோஜா ரூ. 350 இற்கு விற்கப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை அதிகரித்துள்ளது.

ஒரு பூச்செண்டு ரூ.2500 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

2023 இல் ஒரு ரோஜா ரூ.600 ஆகவும், 2024 இல் ரூ.300 ஆகவும் இருந்தது.

தற்போது 2025 பெப்ரவரியில் ஒரு சாதாரண சிவப்பு ரோஜா சுமார் ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது.

இருப்பினும், பெரிய பூச்செண்டுகள் ரூ.8000 முதல் ரூ.12000 வரை காணப்படுகின்றன.

பாரிய இணைய நிறுவனங்கள் உயர் மட்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ரூ. 50,000 முதல் ரூ.75,000 க்கும் அதிகமான விலையுள்ள பாரிய ரோஜா பூச்செண்டுகளை விற்பனை செய்கின்றன.

நுவரெலியா மற்றும் பதுளை பகுதிகளில் அறுவடை குறைவாக உள்ளதால், இந்தியாவிலிருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதிக இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைத்துள்ளதால், பூக்களை வாங்குவதை விட விலைகளை மட்டும் கேட்டுவிட்டுச் செல்வதையே அதிகம் காண முடிகிறது.

வழமையாக பெப்ரவரி மாதம் பூ விற்பனைக்குச் சிறந்த மாதமாக இருந்தாலும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களை விடவும் மோசமான விற்பனையே பதிவாகியுள்ளது.

வர்த்தகத்தை மேம்படுத்த சில கடைக்காரர்கள் தள்ளுபடி சலுகைகளை வழங்கினாலும், ஒட்டுமொத்த கேள்வி மந்தமாகவே உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.