கொங்க்ரீட் துண்டு தலையில் விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!
கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரத்திலுள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 07ஆவது மாடியின் 02 வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை நேற்று காலை உடைந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது கடைக்கு சென்ற 7 வயதான சிறுவனின் தலையில் இந்த சீமெந்து கலவை வீழ்ந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கட்டடத் தொகுதியின் உறுதி மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
