வைத்தியசாலைகளின் கிளினிக் சேவைகளில் இருந்து விலக அரச வைத்தியர்கள் தீர்மானம்!


விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலைகளின் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 50 கிளினிக் நிலையங்கள் மற்றும் நடமாடும் கிளினிக் அமைப்புகள் என்பன அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என அந்த சங்கத்தின் செயலாளர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரம்ப சுகாதார சேவையை பராமரிக்க பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்று வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அரசாங்க அதிகாரிகள் முறையான தலையீடுகளை மேற்கொள்ளாத பட்சத்தில், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஒரு முழுமையான வேலைநிறுத்தப் போராட்டமாக மாறக்கூடும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பிரபாத் அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.