பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி - யாழில் பயங்கரம்!


யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கிடமான 'ஹயஸ்' ரக வாகனம் ஒன்றை பொலிஸார் மறித்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி அந்த வாகனம் நிற்காமல் சென்றதுடன், திடீரென மீண்டும் திரும்பி கடமையில் இருந்த பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது. 

இதனால் சுதாகரித்துக்கொண்ட பொலிஸார், தற்காப்புக்காகவும் வாகனத்தை நிறுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றுது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் பயணித்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் தலையில் படுகாயமடைந்தார். 

பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த ஹயஸ் வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனைத் தவிர, ஏனைய இருவரையும் பொலிஸார் அதே இடத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.

பிடிபட்ட இருவரிடமும் ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாகனம் எதற்காக நள்ளிரவில் அங்கு வந்தது? சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.