7 பேரில் ஒருவருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்பு!
உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு 7 பேரில் ஒருவருக்கு மனநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தேசிய மனநல நிறுவகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் தம்மிக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மனநல நிறுவகத்தில் மாத்திரம் வருடத்திற்கு 50,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் தினமும் 600 இற்கும் அதிகமான கிளினிக்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய மனநல நிறுவகமானது எவ்வித வேலைநிறுத்தப் போராட்டங்களும் இன்றி, தடையற்ற சேவையை வழங்கி வருவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
எவரேனும், எந்த நேரத்திலும் தேசிய மனநல நிறுவகத்திற்கு வருகை தந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 1926 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், மேலதிக சிகிச்சைகளையும் நாட முடியும்.
நாங்கள் வட்ஸ்எப் ஊடாகவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக இளைஞர், யுவதிகள் தமது பிரச்சினைகளை வட்ஸ்எப் ஊடாகவே அதிகம் முன்வைக்கின்றனர்.
தொலைபேசியில் அழைத்துப் பேசும்போது, தாம் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்ற பயத்தினால், அவர்கள் தமது பிரச்சினைகளை வட்ஸ்எப் ஊடாக அனுப்பி ஆலோசனைகளைப் பெறுகின்றனர் என தெரிவித்தார்.
