தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை; கைது செய்ய உத்தரவு!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பில் சர்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.
சர்ச்சையான பாடப்புத்தம் தொடர்பான வழக்கை விசாரித்த கங்கொடவில நீதவான் நீதிமன்றம், இது குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று (20) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை வழங்கினார்.
தரம் 6 மாணவர்களுக்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுப்பில், ஒரு பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த கியூஆர் குறியீடு அல்லது இணையதள இணைப்பு, ஆபாசமான அல்லது தகுதியற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதளத்திற்கு இட்டுச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அச்சு மற்றும் பாடத்திட்டத் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
