2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு!
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், 2025ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸாரின் ஒட்டுமொத்த செயற்திறனை 50 வீதத்திலிருந்து 60 வீதம் வரை அதிகரிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் ஆயுதச் சோதனைகள் இரண்டு மடங்காகவும், போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது இலங்கை பொலிஸ் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த மட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், தொடர்ச்சியான கண்காணிப்பு, உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்யும் பணிகளைச் சரியாக மதிப்பீடு செய்தமை காரணமாக பொலிஸ் சேவையின் செயற்திறனை உயர் மட்டத்தில் பேண முடிந்ததாக பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.
அத்துடன், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான சட்ட அமுலாக்கம் மற்றும் ஏனைய குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளும் 60 வீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அமைச்சரின் நேரடித் தலையீட்டின் மூலம் நீண்டகாலமாக நிலவிய உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து 4,500 க்கும் மேற்பட்ட பதவி உயர்வுகளை வழங்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி
