அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்!


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அல் கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் . அமெரிக்க விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஈரானை நோக்கி தொடர்ந்து பாய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களது நாட்டிற்கான அச்சுறுத்தலை நீக்கவே இந்த தாக்குதலை தொடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரான் தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த மோதல் ஒரு முழு அளவிலான உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகளிடையே எழுந்துள்ளது.