அரச வைத்தியசாலையில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (IVF) சிகிச்சை
கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில், மிக விரைவில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (In Vitro Fertilization – IVF) சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த புதிய சிகிச்சை வசதிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தந்தநாராயண தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு காரணமாக இந்தச் சிகிச்சையைப் பெற முடியாத தம்பதிகளுக்கு, அரச பொதுச் சுகாதாரத் துறையின் ஊடாக ஒரு நியாயமான வாய்ப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது இலங்கையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே IVF சேவை வழங்கப்படுகிறது. அங்கு ஒரு முறை (One Cycle) சிகிச்சைக்கு சுமார் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய் வரை செலவாகும் நிலையில், இது பல தம்பதிகளுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
இந்த சிகிச்சை முறை, கருப்பை குழாய்களில் அடைப்பு (Blocked Fallopian Tubes), விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, ஹார்மோன் குறைபாடுகள், நீண்ட காலமாக காரணம் கண்டறியப்படாத மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும்.
அரச மருத்துவமனைகளில் IVF சிகிச்சை அறிமுகமாகுவதன் மூலம், சாதாரண மக்களும் தங்களது பெற்றோர் ஆகும் கனவை நனவாக்கும் ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IVF என்பது, பெண்ணின் கருமுட்டையை உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்கச் செய்து, உருவாகும் கருவை பின்னர் மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் மாற்றும் ஒரு நவீன மருத்துவ முறையாகும்.
