ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடி அறிவிப்பு: பதவி பறிபோனாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகத் தயார்!
தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
“எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தனது பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அதனை ஏற்றுக்கொண்டு பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நான் வெளியேறத் தயாராகவே உள்ள ஒரு மனிதன். நான் இங்கு அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அல்ல. அதேபோன்று, இந்த மாற்றத்தைச் செய்வதற்காக அந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ள மனிதன். சவால் ஏதுமின்றி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மாற்றம் எப்போதும் சவாலை எதிர்கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இருப்பினும் விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன அல்லவா? அதில் உயிர் ஆபத்து இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
ஆனால், ஓர் சவாலை எதிர்கொள்ளாமல் எதனையும் மாற்றியமைக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அதனால் அந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்” என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சவாலின் காரணமாக தனது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டாலும், அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
