இன்று முதல் கட்டாயமாகும் இருக்கைப்பட்டி சட்டம் : மீறினால் அபராதம்


 இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய அனைத்து வீதிகளிலும் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதனை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை (National Council for Road Safety) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக, அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகன சாரதிகள் மற்றும் வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயமாக இருக்கைப்பட்டி அணிய வேண்டும். குறிப்பாக, வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிக்கு இந்த சட்டம் கண்டிப்பாக பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த விதிமுறையை நாடு முழுவதும் கடுமையாக அமல்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.