இன்று கூடும் நாடாளுமன்றம் – அஸ்வெசும தொடர்பில் விவாதம்


நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வார நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கிடையில், ‘திட்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன்னர் போதிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும், அதனுடன் தொடர்புடைய முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்காகவும் விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், வியாழக்கிழமை ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.