நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் முக்கிய நகரங்களில் கடந்த 24 மணிநேரமாக காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்கள் (PM2.5) அளவு மிதமான நிலையில் காணப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், அடுத்த 24 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில நகரங்களில் காற்றின் தரம் மிதமானதிலிருந்து சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு மாறக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எல்லை தாண்டிய காற்று மாசு காரணமாக வடக்குப் பகுதியிலிருந்து வீசும் மாசடைந்த காற்றினால், அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்,
சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
