இணைய விளம்பரங்கள் மூலம் கோடி ரூபாய் நிதி மோசடி – பெண்கள் கும்பல் கைது
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களில் இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது மைத்துனி அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், தரமான தளபாடங்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், அவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் இணையத்தளங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டு மக்களை கவர்ந்துள்ளனர். இதனை நம்பி நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முன்பணம் செலுத்திய நிலையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இவர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் தொலைபேசி, தனியார் வங்கிகளைச் சேர்ந்த இரண்டு விசா அட்டைகள் மற்றும் மோசடி மூலம் பெற்ற ரூ. 87,000 பணம் ஆகியவற்றை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கு மாகாணத்தின் தெற்கு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் OIC இன்ஸ்பெக்டர் சுமித் ஜெயசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
.jpeg)