யாழ் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை – நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலப் பகுதிகளில் ஒரு உறுதியற்ற நிலை உருவாகும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் இக்காலப்பகுதியில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை பணிகளில் ஈடுபடும் விவசாயிகளும், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்தும் விவசாயிகளும் இந்த மழை நாட்களை கருத்தில் கொண்டு தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வெங்காயம் மற்றும் மரக்கறி பயிரிடும் விவசாயிகளும் தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.
மேலும், தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் சற்றளவு அதிகரிக்கும் எனவும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
