அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட சுற்றறிக்கை

 

ரமழான் காலப்பகுதியில் அரச ஊழியர்கள் தங்களது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் அலோக பண்டாரவினால் (Aloka Bandara) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையின் படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை ரமழான் பண்டிகைக்கான நோன்பு காலம் நடைமுறையில் இருக்கும்.

இதனடிப்படையில், அனைத்து அமைச்சக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பெப்ரவரி 19 முதல் மார்ச் 21 வரை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிரார்த்தனை மற்றும் பிற மத நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபடுவதற்கான தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகாரிகள் மத அனுஷ்டானங்களில் பங்கேற்கக்கூடிய வகையில் பணிநேர மாற்றங்களை மேற்கொள்ளவும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிறப்பு விடுப்புகளை அங்கீகரிக்கவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மத நடவடிக்கைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாளாந்த நேரங்களையும் அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அவை, காலை 3.30 மணி முதல் காலை 6.00 மணி வரை, மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை, மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை மற்றும் மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஆகும்.

இதேவேளை, ரமழான் பண்டிகைக்கு முன்பாக 14 நாட்களுக்குள் தகுதியுடைய அரச ஊழியர்களுக்குப் பண்டிகைக்கான முன்பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.