இலங்கையில் மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை ; தீவிர அவதானம்


இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒழுக்கக்கேடான மற்றும் அபாயகரமான சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பில் பல நாடுகள் ஏற்கனவே சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதனைப் பின்பற்றி இலங்கையிலும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அணுகலைத் தடை செய்வது குறித்த ஆலோசனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.