வாகன உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை – இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் வாகன கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வாகன உரிமையாளர்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான காரை திருடிய சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், சந்தேகநபர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட கார் மற்றும் 6.235 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஏழு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பிலியந்தல பொலிஸ் பிரிவில் கடந்த 2025 டிசம்பர் 12ஆம் திகதி சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 23 முதல் 28 வயதுக்கிடைப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.