விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்…! அறிவிக்கப்பட்ட புதிய கொடுப்பனவுகள்

 


2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் விவசாய காப்புறுதிச் சபை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா அவரை, மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானை தாக்குதல், பூச்சித் தாக்கம், தீ விபத்துகள், நோய்கள் மற்றும் பீடைகள் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்த தவணைக் கட்டணங்களை செலுத்துவதன் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கௌபி, பாசிப்பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள் மற்றும் கொள்ளு போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபா 60,000 வரை இழப்பீடு பெறுவதற்கான காப்புறுதித் தவணை, மொத்த காப்புறுதித் தொகையின் 7% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, பால் கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், சிறிய வெங்காயம், கத்தரி, வெண்டை, அவரை, குடை மிளகாய், தக்காளி, பாகற்காய் மற்றும் பூசணி ஆகிய பயிர்களுக்கும் 7% தவணை கட்டணம் போதுமானதாகும். உதாரணமாக, சர்க்கரைவள்ளி செய்கையில் ஏக்கருக்கு ரூபா 100,000 காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற ரூபா 7,000 மட்டுமே தவணையாக செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், இஞ்சி, மஞ்சள், கறுவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை போன்ற பயிர்களுக்கும் மிகச் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணங்களுடன் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இத்திட்டங்களில் பங்கேற்று பயிர்ச் சேத அபாயங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்களை விவசாய காப்புறுதிச் சபையின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.