குடும்பத் தகராறால் வீட்டிற்கு தீ வைப்பு; தீயில் கருகி தந்தையும் மகளும் பலி!


அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில், தந்தையும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 43 வயதுடைய தந்தையும், 13 வயதுடைய மகளுமாவர்.

மேலும், தீ விபத்தில் காயமடைந்த 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மற்றொரு மகள், 20 வயதுடைய மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை வீட்டிற்கு தீ வைத்த நேரத்தில், வீட்டில் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அறிந்த 20 வயதுடைய மகன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அவர் தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணைகளில், குறித்த நபர் அடிக்கடி மது அருந்தி மனைவியை தாக்கி வந்ததாகவும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தொடர்ச்சியான தகராறுகள் காரணமாக கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.