நாட்டில் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிப்பு ; சிறுவர்கள் அதிகம் பாதிப்பு
நாட்டில் தற்போது நிலவும் குளிர்ச்சியான மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே இதுகுறித்து தெரிவிக்கையில், குறிப்பாக முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் இந்த வைரஸ் நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய வானிலை காரணமாக சுவாசத் தொகுதியின் மேற்பகுதியைத் தாக்கும் வைரஸ்கள் பரவக்கூடும். இதன் விளைவாக காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி ஆகியவற்றுடன் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
இந்த நோய் அறிகுறிகள் மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்தால் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நாட்டில் காற்றின் தரம் தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இந்த நிலைமை சீராகும் என சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார்.
