5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்


டித்வா புயலால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகிக் கொள்ள கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று (19) முதல் குறித்த பணிகளில் ஈடுபடாமல் இருப்பதாக அந்தச் சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் காணப்படும் பல குறைபாடுகளே இந்தத் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த கொடுப்பனவு வழங்கும் செயல்முறையை அரசாங்கம் முறையான மற்றும் தெளிவான கட்டமைப்பின் கீழ் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டித்வா புயலால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் முன்னதாக தீர்மானித்திருந்தது. எனினும், இதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் மற்றும் அரச கணக்காளர்கள் சங்கம் ஆகியவை ஏற்கனவே இந்தப் பணிகளில் இருந்து விலகியிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, குறித்த பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், பேரிடர் காலங்களில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தங்களுக்கு உரிய மற்றும் போதுமான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை எனக் குற்றம் சுமத்தி, இன்று முதல் தாங்களும் இந்தப் பணிகளில் இருந்து விலகுவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.