கண்டியில் அனர்த்தத்தில் சிக்கி 35 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் பலி!


வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், 

நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காணாமல்போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார். 

அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 16 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.