வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு - 256 கடவுச்சீட்டுகளுடன் கைதான நால்வர்!


வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - மருதானை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின்  அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு எதிராக 85 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் நிறுவனத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 256 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டு வருகிறது.