முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!


‘லங்கா கவர்மன்ட் கிளவுட்’ (Lanka Government Cloud) சேவையில் காணப்பட்ட சிக்கல்கள் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.

குறித்த தொழிநுட்ப கோளாறு காரணமாக, 34 அரச நிறுவனங்களின் இணையத்தள சேவைகள் சுமார் ஒரு வார காலமாக செயலிழந்திருந்தன.

குறிப்பாக பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் இறப்பு, திருமண சான்றிதழ் கட்டமைப்பு, மாகாண மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்கள (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி செலுத்தல் கட்டமைப்பு, பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் கட்டமைப்பு, வர்த்தக வாணிப திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய தகவல் கட்டமைப்பு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கையின் கணக்காய்வு தரநிலைகள் சபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் உள்ளிட்ட பல அரச gov.lk இணையத்தள சேவைகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளும் நேற்று (20) முதல் படிப்படியாக வழமைக்கு திரும்பிய நிலையில் இன்று (21) காலை முதல் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக ICTA குறிப்பிட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தற்போது வழக்கம் போல் அதன் சேவைகளை தடையின்றி பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.