இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 4 பெண் டி.ஐ.ஜிகள் நியமனம்!


இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நேரத்தில் நான்கு பெண் அதிகாரிகள் பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பதவி உயர்வுகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (NPC) அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, இவ்வருடம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர, மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

புதிய DIG பதவியினை பெற்ற இவர்களில் மூவர், 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தவர்கள் ஆவர்.

  • தர்ஷிகா குமாரி — தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
  • பத்மினி வீரசூரிய — தற்போது களுத்துறை மாவட்ட பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வருகிறார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்தை பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
  • ரேணுகா ஜயசுந்தர — குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார்.
  • நிஷானி செனவிரத்ன — நான்கு DIGகளில் மூத்த அதிகாரி ஆவார். தற்போது ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வருகிறார். மேலும், அரச புலனாய்வு சேவையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர் ஆவார்.