இன்று முதல் அரச ஊழியர்களுக்கு அபராதம் - குறைக்கப்படவுள்ள சம்பளம்!
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்குமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த அபராதம் விதிப்பு இன்று (14) முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவலவின் ஆலோசனையின் பேரில், அதன் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற நீதியரசர் ரங்க திசாநாயக்க, அரசாங்கத் தலைவர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய அரச அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 நிலவரப்படி தங்கள் சொத்துக்களின் விவரங்களை ஜூன் 30 திகதிக்கு முன் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிறுவனத் தலைவர்கள் அந்த சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு அனுப்புவார்கள்.
மேலும், ஜூன் (30) ஆம் திகதிக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு, தங்கள் அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும், அந்த இரண்டு வாரங்களில் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கும் அதிகாரிகளுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணையம் எச்சரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளது.
அதன்படி, அரச அதிகாரிகள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
மேலும் இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் ஒவ்வொரு நாளுக்கும் முப்பதில் ஒரு பங்கு சம்பளம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை இன்னும் சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் வரும் நாட்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.