இலஞ்ச குற்றச்சாட்டில் கதுருவெல காதியும் கைது!


இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை கதுருவெல பகுதியிலுள்ள காதி நீதிமன்றத்தின் நீதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் எழுத்தாளர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விவாகரத்து வழக்கு ஒன்றில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம்  ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இவரை கதுருவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கெலிஓயாவில் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக காதி நீதிவான் கைது செய்யப்பட்டிருந்தார்.