ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் கருதி விசேட நடவடிக்கை
ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.