மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் பின்னர் பரபரப்பு; காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
மன்னார் நகரசபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று மன்னார் நகரசபை பொது மண்டபத்தில் இடம்பெற்ற பின்னர் இரு நபர்கள் இணைந்து ஒரு நபரை தாக்கிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்த காயங்களுடன் மன்னார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் மன்னார் நகரசபை அமர்வுகள் நிறைவடைந்த நிலையில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் மன்னார் நகரசபை முன்பகுதியில் நிறைந்திருந்த நிலையில்,
நபர் ஒருவரை அழைத்து இருவர் உரையாடி இருந்தனர்.
குறித்த உரையாடல் கைக்கலப்பாக மாறி இரு நபர்களும் இணைந்து மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த நபர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருந்தனர்.
சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.