ஈரானின் அணு உலையை தாக்கிய இஸ்ரேல்; அணு கசிவால் கடுமையாக மக்கள் பாதிக்கப்படும் நிலை!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் கதிரியக்க கசிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கே அணு கசிவு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச அணுசக்தி முகாமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் நாட்டின் நடான்ஸ் அணு உலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அந்த இடத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவு இயல்பாகவே உள்ளது, எனவே பொதுமக்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடான்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து க்ரோஸி கூறுகையில், “நடான்ஸில் உள்ள அணு உலகை அமைப்பில் இஸ்ரேல் தாக்குதலால் கதிரியக்க மற்றும் இரசாயனக் கலப்படம் ஏற்பட்டுள்ளது. அந்த வசதிக்குள் இருக்கும் ஆல்பா துகள்கள் போன்ற கதிர்வீச்சை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இனி கட்டுப்படுத்த முடியும்.
கசிவு ஏற்பட்டுள்ளது பற்றி தீவிர ஆய்வுகள், சோதனைகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும், யுரேனியம்-235 ஐ 60 சதவீதம் வரை செறிவூட்டும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் மேற்பரப்பு பகுதியை இஸ்ரேலிய தாக்குதல்கள் அழித்துவிட்டது. அங்கேயும் ஆய்வு செய்து வருகிறோம்.
சேதங்களை மதிப்பிடுவதற்கும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஈரான் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துடன் நமது அமைப்பு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
ஈரான் தற்போது நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதியில் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலை உள்ளது. அந்த அணு உலையில் உள்ள முக்கிய மற்றும் அவசரகால மின் அமைப்புகள் உட்பட மின்சார உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.
நிலத்தடி கேஸ்கேட் மண்டபத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மின்சாரம் தடைப்பட்டதால் அங்குள்ள coolant பாதிக்கப்பட்டிருக்கலாம். அதோடு ஃபோர்டோவ் எரிபொருள் செறிவூட்டும் ஆலை மற்றும் இஸ்பாஹான் வளாகம் உட்பட பிற இடங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் நடந்ததாக ஈரான் முகமைக்கு தெரிவித்துள்ளது.
யுரேனியம் மாற்றும் வசதி, எரிபொருள் தகடு தயாரிக்கும் ஆலை, எரிபொருள் உற்பத்தி ஆலை மற்றும் யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பவுடர் ஆலை ஆகியவை அடங்கும். இந்த இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவையும் ஐ.ஏ.இ.ஏ ஆய்வு செய்து வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கவலை அளிக்கின்றன. அணுசக்தி நிலையங்கள் மீது எந்தச் சூழலிலும், எந்தவித காரணத்திற்காகவும் தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன், ஏனெனில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
இத்தகைய தாக்குதல்கள் அணுசக்தி பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறி உள்ளார்.
தாக்குதல் நடந்ததிலிருந்து ஐ.ஏ.இ.ஏ-வின் அவசர மையம் (IEC) ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இதற்கான பணிக்குழுவும் 24 மணி நேரமும் சூழ்நிலையை கண்காணித்து தேவைப்பட்டால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.