அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரான் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்!


அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்க, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது.

இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தியுள்ளன.

குறிப்பாக இன்று காலை 10.30 மணிக்கு முன்னர் டெல் அவிவின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து இயல்பாக நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் 10.47 மணிக்கு மொத்த வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

ஏவுகணை தாக்குதல் தொடர்வதற்கு முன்னர் சைரன் ஒலிக்கும். மக்கள் உஷாராகி பதுங்கு குழிக்குள் பதுங்கிவிடுவார்கள்.

ஆனால், சைரன் ஒலிப்பதற்கு முன்னரே இந்த முறை தாக்குதல் நடந்திருப்பதாக இஸ்ரேல் மக்கள் கூறுகின்றனர்.

முதல் கட்ட ஏவுகணை தாக்குதலை முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியிருப்பதாகவும் ஈரானிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இஸ்ரேலிலிருந்து, பாதிப்புகளின் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. Ben Gurian Airport ,Biological Investigation Centre, Command Centre of IDF என மூன்று முக்கியமான இடங்களை ஈரான் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அமெரிக்க உளவுத்துறையிடம் கூட ஆதாரங்கள் கிடையாது.

இருப்பினும் மத்திய கிழக்கில் ஈரானின் வளர்ச்சியை கட்டுப்படுத்த இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக தொடர்ந்து ஈரானை தாக்கி வந்திருக்கிறது.

கடந்த வாரம் இந்த தாக்குதல் உச்சத்தை எட்டியிருந்தது. ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் போர் தொடங்கியது.

இன்று அதிகாலை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி மையங்களின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதலில் அனைத்து அணுசக்தி மையங்களும் அழிக்கப்பட்டுவிட்டது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், தாக்குதல் வெற்றிப்பெறவில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.