மனைவியின் தலையுடன் சென்று பொலிஸில் சரணடைந்த கணவன் - வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் மனைவியை வெட்டி அவரின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தில் அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளளார்.
மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரம் இருவருக்குள்ளும் தீர்க்கப்பட்டு, அண்மைய நாட்களில் இருவரும் சுமுகமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் குறித்த விடயத்தை வேறு ஒரு இளைஞன் ஆதாரங்கள் என சிலவற்றை அனுப்பி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஆசிரியையின் சகோதரனிடமும் கணவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.
இவ்வாறு மனைவியை அழைத்துச் சென்று நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
அதேவேளை தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.