முடி வெட்டுவதற்காக சென்ற தொழிலதிபர் - காட்டுக்குள் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!
மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் மில்லாவா பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் கடந்த 25 ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்காக வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி டோரடியாவா போலீசில் புகார் அளித்திருந்தார்.
பின்னர் பொலிஸார் விசாரணைக்காக அந்தப் பெண்ணை அழைத்து வந்தபோது, அந்த உடல் அவரது கணவருடையது என அடையாளம் கண்டனர்.
அதன்படி, குருநாகல் பொது மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்து மஹாவா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.