சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து மீரிகம பகுதியில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் கோழி பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட ஐந்து யூத மதகுருமார்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தொழிற்சாலையில் சோதனை நடத்தி, மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட ஐந்து யூத மதகுருமார்களை கைது செய்தனர்.
மற்ற இருவர் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட விசாரணைகளில், இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து யூத மதச் சட்டங்களுக்கு ஏற்ப கோழிப் பொருட்களை தயாரிக்கும் கோஷர் முறையில் தயாரித்து வந்தது தெரியவந்தது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இறைச்சி உள்ளூர் சபாத் ஹவுஸ், யூத மத மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, யூத மக்கள் அதிகம் வரும் அருகம்பே கடற்கரை நகரத்திற்கு அனுப்பப்படவிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் குடிவரவு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,
‘இரண்டு இஸ்ரேலியர்கள் மார்ச் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வந்தனர். மற்றவர்கள் ஜூன் முதல் வாரத்தில் வந்தனர். யூத மத உணவு சம்பிரதாயங்களை மேற்கொள்வது இலங்கையில் சட்டவிரோதமல்ல. ஆனால், சுற்றுலா விசாவில் வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வது சட்டவிரோதமாகும்.
சுற்றுலா விசாவில் எந்தவொரு வேலை தொடர்பான செயல்பாடும் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற செயல்பாடு இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மதகுருமார்கள் இதற்கு முன் மத அனுமதி பெறாமல் இலங்கைக்கு வருவதற்கு முன் மதவிவகார அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு நாடு கடத்தப்பட உள்ளனர்.