திரைப்படமாகிறது மரணதண்டனை பெற்ற றிசானா ரஃபீக்கின் கதை : கொழும்பில் இடம்பெற்ற திரைப்பட அறிமுக விழா
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா ரபீக் பற்றிய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘றிசானா” எனும் திரைப்படத்தின் அறிமுக விழா இன்று கொழும்பில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்ட றிசானாவின் கதையை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. இயக்குனர் சந்திரன் ரட்னம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’ எனும் தலைப்பானது றிசானா சிறையில் அடைக்கப்பட்டதையும், அவருக்கு ஏற்பட்ட சுதந்திரமின்மையை குறிப்பதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
றிசானாவின் கதாபாத்திரத்தில் விதூஷிகா ரெட்டி நடித்துள்ளதுடன், இந்திய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், பிரபல பிரித்தானிய நடிகர் ஜெரமி அயன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சுமதி ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
றிசானாவின் கதை என்பது வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளையும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை பற்றிய ஆழமான நினைவூட்டலாக அமைகின்றது.
இந்த திரைப்படம், அந்த அனர்த்தமான சம்பவத்தை மட்டுமல்லாமல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு அவசியமானவை என்பதையும் உணர்த்துவதற்கான ஒரு முயற்சியாகும் என திரைப்பட குழுவினர் தெரிவித்தனர்.