முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக புதிய வட்ஸ்அப் சேவை அறிமுகம்!


முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதியவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் மற்றும் புறக்கணிப்புக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட வட்ஸ்அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி, இதுபோன்ற சம்பவங்களைப் பொதுமக்கள் தேசிய மூத்த குடிமக்கள் செயலகத்துக்கு நேரடியாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள தொடர்பு இலக்கம் 0707 89 88 89 மாகும், இதன் ஊடாக 24 மணி நேரமும் செயல்படும் வட்ஸ்அப் சேவையின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை, முதியவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 15ம் திகதி இந்த விழிப்புணர்வு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளை ஐக்கிய நாடுகள் பொதுசபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிகழ்வை ஒட்டி, “சரணா” எனும் புதிய ஆதரவு சேவையும் அறிமுகமாகியுள்ளது. இது, முதியவர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான நலன்கள் உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சேவையின் அதிகாரபூர்வ அறிமுகம் நேற்று (16) சமூக பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.

இதில், மாகாண அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலாகே மற்றும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் பங்கேற்று சேவையைத் தொடங்கி வைத்தனர்.