பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை! - யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை - மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்.

குறித்த பகுதியில் நேற்றுமுன் தினம் முற்பகல் கோப்பாய் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும் குறித்த நபர் நேற்றுமுன் தினம் இரவு தமது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் மீது கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த குறித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.