10 இளைஞர்களை ஏமாற்றி மணந்த பெண்; 11 ஆவதாக லிஸ்ட்டில் இருந்த ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!


கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில், பலரை திருமணம் செய்து ஏமாற்றி வந்த பெண் ஒருவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமண வரன் தேடிவரும் வார்டு உறுப்பினர் ஒருவரிடம், ஒரு பெண் தனது மகள் ரேஷ்மாவை பற்றி  அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் இருவருக்கும் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, ரேஷ்மா அந்த இளைஞரை நேரில் சந்தித்து, தொடர்ந்து செல்போன் மூலமும் தொடர்பு வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரேஷ்மா திடீரென “தாயார் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை” என கூறி பின்வாங்க முயற்சி செய்தார். ஆனால், அந்த வார்டு உறுப்பினர் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்ய முடிவெடுத்து, மணமகளாக அலங்கரித்த ரேஷ்மாவை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, ரேஷ்மாவிடம் இருந்த பையில் தவறுதலாக ஒரு மேரேஜ் சர்டிபிகேட் (திருமண சான்றிதழ்) கிடைத்துள்ளது. அதில், 45 நாட்களுக்கு முன்பே வேறொரு ஆணுடன் ரேஷ்மா திருமணம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் திருமண மண்டபத்திற்கே சென்று ரேஷ்மாவை கைது செய்தனர். விசாரணையின் போது, ரேஷ்மாவுக்கு ஏற்கனவே 2 வயதான ஒரு குழந்தை இருப்பது, மேலும் மேட்ரிமோனி தளங்களில் புதிய வரன்கள் தேடுவோரை ஏமாற்றி நகை மற்றும் பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

தற்போதுவரை ரேஷ்மா 10 பேரை ஏமாற்றியிருப்பதுடன், அதில் 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அவற்றுக்கான திருமண சான்றிதழ்களும் வைத்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ஆம் தேதி மற்றொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி சம்பவம் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.