பட்டமளிப்பு விழாவில் காசாவுக்காக குரல் கொடுத்த இந்திய மாணவியை வெளியேற்றிய MIT பல்கலைக்கழகம்!
பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய மாணவி ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.
புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், PG வகுப்பு தலைவரான மேகா வெமுரி, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்ந்து உறவுகளைக் கொண்டுள்ளதை கண்டித்தார்.
அவர் கூறியதாவது, “இஸ்ரேல் பலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கிறது. MITஅதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக்கேடானது. நாங்கள் பட்டம் பெற்று எங்கள் வாழ்க்கையைத் தொடரத் தயாராகி வரும் நிலையில், காசாவில் எந்தப் பல்கலைக்கழகமும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடனான MITயின் கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் அழுத்தம் கொடுத்தோம்.
MIT ஆராய்ச்சி உறவுகளைக் கொண்ட ஒரே வெளிநாட்டு இராணுவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மட்டுமே” என்று அவர் சுட்டிக்காட்டினார். அவரின் உரைக்கு மாணவர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் எல்பிட்டின் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பலஸ்தீனத்தை ஆதரித்து MIT பற்றி மேகா கூறிய கருத்துக்களால் பல்கலைக்கழக வேந்தர் மெலிசா நோபல்ஸ் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுநாள் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தடை விதிப்பதாக மெகா வேமூரிக்கு நிர்வாகம் சார்பில் இமெயில் அனுப்பப்பட்டது.