மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் : கொழும்பு மக்கள் எதிர்த்த நிலையில் புத்தளத்துக்கு மாற்றப்பட்டதனால் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!


கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ஆசிரியரை புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இன்று (09) புத்தளம் சாஹிரா கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது நல்லாட்சிக்கான தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவிக்கு நீதி கோரி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல மகளிர் பாடசாலையின் முன் நேற்றையதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலையின் ஆண் ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

குற்றவாளியைப் பாதுகாத்ததாக குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன், அவருக்கு எதிரான அதிருப்தியை வெளியிட்டனர்.

இதனையடுத்து மாணவியின் மரணம் தொடர்பில் கல்வி அமைச்சு, பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும்  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.