தேங்காய் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும்!
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்தும் அதிகரிப்பதற்கு அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகளே முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்தப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் இருந்து தேங்காய்கள் குறைந்த விலையில் ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் இந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் அதிக விலைக்கு விற்று, இலாபத்தைப் பெறுகிறார்கள்.
இந்த நடைமுறை தென்னை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் தேங்காய் விலை 200 ரூபாவுக்கும் அதிகமாகவே உள்ளது. இது ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஆகும்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்புகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடலின் போது கவலைகள் எழுந்தன.
இந்த விலை அதிகரிப்புக்கு ஓர் தீர்வாக கையிருப்பில் உள்ள தேங்காய்களில் ஒரு பகுதியை மட்டுமே ஏலங்கள் மூலம் விற்பனை செய்யவும், எஞ்சியவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் தேங்காய் விலைகள் தொடர்பில் விசாரணைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.
விலைகளை நிலைப்படுத்த திட்டம் ஒன்றை வகுக்குமாறு விவசாயத்துறையுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏற்ப தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை தயாராகி வருகிறது.
அரசாங்கம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னந் தோட்டங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், அந்த நிலங்களில் பல போதுமான அளவு பயன்படுத்தப்படாமல் இருப்பது கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கம் தற்போது அந்த காணிகளை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் உற்பத்தி மீண்டும் குறையக்கூடும் எனவும், இது மற்றொரு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் ஜயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அவர்களின் கணிப்பு குறித்து தென்னம் பயிர்ச்செய்கை சபை லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.